ByKarmegham

Mar 11, 2026
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? மத்திய அரசின் புது வாடகை விதி!
சொந்த வீடு என்பது பலருக்கு வாழ்நாள் கனவு என்றாலும், நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு ‘வாடகை வீடு’ தான் ஒரே வழி.
ஆனால் வாடகை வீடு என்று வந்துவிட்டாலே.. வீட்டு உரிமையாளர் – வாடகைதாரர் இடையேயான பனிப்போர் காலம் காலமாக நடந்து வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு ‘வாடகை விதிகள் 2026’-ஐ அதிரடியாக அமல்படுத்தியுள்ளது
இனி ‘வீட்டு ஓனர்’ நினைத்த நேரத்தில் உங்களை காலி செய்யச் சொல்ல முடியாது, அதேபோல் ‘அட்வான்ஸ்’ என்ற பெயரில் உங்கள் பாக்கெட்டை காலி செய்யவும் முடியாது.
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:
அட்வான்ஸ் இனி ‘ஆறு மாசம்’ இல்லை!
புதிய விதிகளின்படி, வீட்டு உரிமையாளர்கள் அதிகபட்சமாக இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக (Deposit) பெற முடியும்.
10 மாத அட்வான்ஸ் கேட்டு வாடகைதாரர்களை அலறவிட்ட காலத்திற்கு இனி விடை கொடுக்கப்பட்டுள்ளது.
60 நாட்களில் டிஜிட்டல் முத்திரை
வாடகை ஒப்பந்தங்கள் (Rental Agreements) இனி வெறும் காகிதத்தோடு நின்றுவிடாது. ஒப்பந்தம் போடப்பட்ட 60 நாட்களுக்குள் அவை டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இது இரு தரப்பினருக்குமான சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்யும்.
‘திடீர்’ வாடகை உயர்வு இனி செல்லாது
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாடகையை உயர்த்த முடியும். அதுவும், வாடகையை உயர்த்துவதற்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே (3 மாதங்கள்) வாடகைதாரருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும்.
அனுமதியின்றி நுழைந்தால் அபராதம்!
“என் வீடு, நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன்” என உரிமையாளர்கள் இனி அத்துமீற முடியாது.
அவசர தேவைக்காகவோ அல்லது வீட்டைப் பார்வையிடவோ வருவதாக இருந்தால், குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே வாடகைதாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பராமரிப்புப் பணிகளில் கெடுபிடி
வீட்டில் அத்தியாவசிய பழுதுகள் (Essential repairs) இருந்தால், அதைச் சரிசெய்யுமாறு கோரி 30 நாட்களுக்குள் உரிமையாளர் நடவடிக்கை எடுக்காவிட்டால், வாடகைதாரரே அதைச் சரிசெய்து கொள்ளலாம்.
அதற்கான செலவை மாத வாடகையில் கழித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு.
அதிரடி காலி செய்ய தடை
சரியான சட்ட நடைமுறைகளைப் (Legal due process) பின்பற்றாமல் எந்த ஒரு வாடகைதாரரையும் வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது.
அராஜகப் போக்கிற்கு இனி சட்டத்தின் பிடி இறுகும்.
மிரட்டல்களுக்கு ‘செக்’!
வாடகை தராதது போன்ற காரணங்களுக்காக வீட்டின் பூட்டை மாற்றுவது, மின்சாரம் அல்லது குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது, வாடகைதாரர்களை மிரட்டுவது போன்றவை இனி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த புதிய விதிகள் வாடகைதாரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்தாலும், வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் சில விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் அப்செட்…
வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் இது ஒரு மிகப்பெரிய விவாதப் பொருளாகவும், கவலையாகவும் மாறியிருக்கிறது.
குறிப்பாக, அட்வான்ஸ் தொகையை இரண்டு மாத வாடகையாகக் குறைத்திருப்பது, வீட்டின் பராமரிப்பு மற்றும் தேய்மானச் செலவுகளை ஈடுகட்டப் போதுமானதாக இருக்குமா என்ற அச்சத்தை உரிமையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
வாடகைதாரர் ஒருவேளை வாடகை தராமல் இருந்தாலோ அல்லது வீட்டிற்குச் சேதம் விளைவித்தாலோ, இந்தச் சிறிய அட்வான்ஸ் தொகையை வைத்துக் கொண்டு எப்படிச் சமாளிப்பது என்பது அவர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது.
அதேபோல், சட்டப்பூர்வ நடைமுறைகளின்றி யாரையும் காலி செய்ய முடியாது என்பதும், பராமரிப்புப் பணிகளுக்காக வாடகையில் பணத்தைக் கழித்துக் கொள்ளும் அதிகாரமும், சில ‘சரியான’ வாடகைதாரர்கள் இல்லாத பட்சத்தில் உரிமையாளர்களுக்குப் பாதகமாக முடிய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
இதனால், முன்பை விட இப்போது வாடகைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் உரிமையாளர்கள் அதிகக் கட்டுப்பாடுகளையும், தீவிரமான பின்னணித் தணிக்கைகளையும் (Background check) மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சவாலான மாற்றத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ, ‘வாடகை வீடு’ இனி ஒரு சுமையாக இருக்காது என்பதே எதார்த்தம்!
விவிலியராஜா🤝👍🏻 வழக்கறிஞர்
9442243433

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *